பி.எஸ்சி., ஆர்ட்டிகல்ச்சர் (தோட்டக்கலை) பட்டப் படிப்பிற்கான, தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பெரியகுளம் மற்றும் திருச்சியில் உள்ளது. திருச்சியில் இருப்பது பெண்கள் கல்லூரி. காய்கறி, பழங்கள், பூக்கள் மற்றும் சில பணப் பயிர்கள் உற்பத்தி, மண் வளம், தொழில்நுட்பம், அவை தொடர்பான ஆராய்ச்சி போன்றவை இதில் கற்பிக்கப்படுகிறது.
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பூக்கள் அதிகளவு ஏற்றுமதி ஆகின்றன. இப்போது எல்லா விழாக்களிலும் பொக்கே கொடுப்பது வழக்கமாகிவிட்டது. பூ அலங்காரத் தொழிலும் வளர்ந்துவருகிறது. தோட்டக்கலை படிப்பவர்கள் சொந்தமாக அலங்காரப் பூக்கள் மற்றும் காய்கறி உற்பத்தி செய்யலாம். நர்சரி கார்டன் வைக்கலாம். பொக்கே தொழிலும் செய்யலாம்.
இந்தப் படிப்பை முடிப்பவர்களுக்கு அரசு தோட்டக் கலைத்துறை, வேளாண்மைத் துறையிலும் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகம், கனடா நாட்டின் டல்ஹவுசி பல்கலைக்கழகத்துடன் செய்துள்ள கூட்டு ஒப்பந்தத்தின்படி, தோட்டக்கலை படிப்பவர்கள் இரட்டைப் பட்டப் படிப்பு படிக்க முடியும். தோட்டக்கலை படித்துக் கொண்டிருக்கும்போதே, பட்டமேற்படிப்பு படிக்க கல்லூரியே வசதி செய்து கொடுக்கிறது.
பி.எஸ்சி., பாரஸ்ட்ரி படிக்க மேட்டுப்பாளையத்தில் வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மட்டுமே உள்ளது. அதிலும் 45 இடங்கள்தான். வனம் சார்ந்த படிப்பு என்பதால் ஆரம்பத்தில் பெண்கள் தயக்கம் காட்டினர். தற்போது, பெண்களும் ஆர்வமுடன் படிக்கின்றனர்.
இந்தப் படிப்பை படித்தால், காட்டுக்குள் பணியாற்ற வேண்டும் என்ற அச்ச உணர்வு பலரிடம் உள்ளது. பாதுகாப்பு அம்சங்கள் நிறைய இருப்பதால் பயம் தேவையில்லை. வனங்கள், வன விலங்குகள் வாழ்வியல் முறை, சுற்றுச்சூழல், பல்லுயிரியம் தொடர்பான வெகு சுவாரஸ்யமான படிப்பு இது.
இதைப் படிப்பவர்கள் வனத்துறையின் உயர் பதவிகளுக்கு செல்லலாம். இதில் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்பவர்களுக்கு வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது. தவிர, எஸ்டேட் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட பணி வாய்ப்பும் உள்ளது.
வேளாண்மைப் படிப்பில் பி.எஸ்சி., ஹோம் சயின்ஸ் பட்டப் படிப்பு இருக்கிறது. இதில் இன்டீரியர் டெக்ரேஷன், ஃபேஷன் டிசைனிங், நியூட்ரீஷன் உள்ளிட்ட பாடப் பிரிவுகள் உள்ளன. இதைப் படிப்பவர்களுக்கு அமெரிக்காவில் உள்ள கர்னல் யுனிவர்சிட்டியில் பட்ட மேற்படிப்பு பயில கல்லூரிகளே வாய்ப்பு ஏற்படுத்தித் தருகின்றன.
இவர்களும் இரட்டை பட்டப் படிப்பு படிக்கலாம். பி.எஸ்சி., ஹோம் சயின்ஸ் படிப்பவர்களுக்கு பல்வேறு துறை சார்ந்த வேலைவாய்ப்பு கிடைக்கிறது. மருத்துவமனை மற்றும் ஹோட்டல்களில் நியூட்ரீஷனாகவும், இன்டீரியர் டெக்ரேஷனராகவும் ஆகலாம். ஆடை வடிவமைப்பு நிறுவனங்களிலும் பணியாற்றலாம்.