Saturday, August 29, 2015

கணிதப் பட்டதாரிகளுக்கு உதவித்தொகை



கணிதப் பாடத்தில் இளநிலை பட்டம் பெற்ற மாணவர்களுக்கு மத்திய அணுசக்தித் துறையின்கீழ் இயங்கும் நேஷனல் போர்டு ஆப் மேத்மேட்டிக்ஸ் முதுநிலைப் பட்டப்படிப்பு படிக்க கல்வி உதவித்தொகை வழங்குகிறது. தகுதிகள்: பிஏ, பி.எஸ்.சி பட்டப் படிப்புகளில் முதல் வகுப்பிலும், பி.எஸ்.சி ஆனர்ஸ் படிப்பை முடித்தவர்கள் குறைந்தது இரண்டாம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு: உதவித்தொகையை பெற, செப்டம்பர் 19-ஆம் தேதி சென்னை, பெங்களூரு, கொச்சி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டும். அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். குறிப்பு: NBHM MA/Msc Scholarship என்று விண்ணப்ப உறையில் குறிப்பிட்டு ஜூலை 31ம் தேதிக்குள் கிடைக்கும்படி அணுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு: www.nbhm.dae.gov.in , www.imsc.res.in

ஜியோஇன்பர்மேட்டிக்ஸ் படிக்க விருப்பமா?



சென்னை பல்கலைக்கழக, புவியியல் துறையில் வழங்கப்படும் எம்.எஸ்சி.,(ஜியோஇன்பர்மேட்டிக்ஸ்) சுயநிதி படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. தகுதிகள்: இளநிலை பட்டப்பிரிவான, பி.ஏ மற்றும் பி.எஸ்.சி..,யில் புவியியல்,புவியமைப்பியல்,இயற்பியல்,சுற்றுச்சூழல் அறிவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், தகவல் தொழில்நுட்பம், விவசாயம், ரிமோட் சென்சிங் உள்ளிட்ட ஏதேனும் ஒன்றை, முதன்மை பாடமாக கொண்டு, தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


அஸ்ட்ரோபிசிக்சில் பட்ட மேற்படிப்புகளை எங்கு படிக்கலாம்?



* உஸ்மானியா பல்கலைக்கழகம்இதில் 2 ஆண்டு எம்.எஸ்சி அஸ்ட்ரோபிசிக்ஸ் படிப்பு தரப்படுகிறது. பி.எஸ்சி இயற்பியல் தகுதி. நுழைவுத் தேர்வு மூலமாக அனுமதி.
* சுவாமி ராமானந்த் தீர்த்த மரத்வாடா பல்கலைக்கழகம், தியானதீர்த்தம், கவுதமி நகர், விஷ்ணுபுரி, நான்டெட் 431 606. எம்.எஸ்சி அஸ்ட்ரோபிசிக்ஸ் படிப்பு தரப்படுகிறது. பி.எஸ்சி இயற்பியல் தகுதி. நுழைவுத் தேர்வு மூலமாக அனுமதி.
* ஸ்கூல் ஆப் பிசிக்ஸ் அண்ட் அப்ளைட் பிசிக்ஸ், மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், பிரியதர்சினி ஹில்ஸ், கோட்டயம் 686 560. இதில் எம்.எஸ்சி இயற்பியல் படிப்பில் அஸ்ட்ரோபிசிக்ஸ் சிறப்புப் பாடமாகத் தரப்படுகிறது.
* இண்டர் யுனிவர்சிடி சென்டர் பார் அஸ்ட்ரானமி அண்ட் அஸ்ட்ரோபிசிக்ஸ், புனே. 


மனம் திறந்து பேசுங்கள்!


பெயர் பெற்ற பிரபலமான கல்லூரியில் படித்தால் தான் மாணவன் பொறியியல் படிப்பை வெற்றிகரமாக முடிப்பான் என்று பெற்றோர்கள் கருதுகின்றனர். ஒரு மாணவன் வெற்றி பெற கல்லூரியோ, ஆசிரியர்களோ, வசதிகளோ, சூழ்நிலையோ மட்டும் கிடையாது. இவற்றையும் கடந்து, நிறைய விஷயங்கள் உள்ளன!
பெற்றோருக்கே பெரும் பங்கு
கல்லூரியில் வசதிகள் எப்படி? உணவு வகைகள் என்ன? நான்கு ஆண்டு முடிவில் வேலைவாய்ப்பு கிடைக்குமா? என்றெல்லாம் தான் பெற்றோர் கேட்கின்றனறே தவிர, இந்த கல்லூரியில் சேர்த்தால், ஒழுக்கமான பொறியாளனாக வருவானா என்று எந்த பெற்றோரும் கேட்பதில்லை! சமுதாயத்திற்கு ஒரு ஒழுக்கமான பொறியாளனை உருவாக்கித்தர வேண்டும் என்றால் அதில் பெற்றோர்களின் பங்கு தான் மிக அதிகம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு மாணவன் தினமும் அதிகபட்சம் 8 மணிநேரம் மட்டுமே கல்லூரியில் செலவிடுகிறான். அந்த 8 மணிநேரத்தில் கல்வியை மட்டுமே ஒரு கல்லூரியால் தரமுடியும். அதையும் கடந்து சில விஷயங்களை மாணவனுக்கு தரமுடியும் என்றால், ஓரளவுக்குத் தான் சாத்தியம். ஆனால், மாணவர்களிடம் 4 ஆண்டுகளுக்குள் மிகப்பெரிய மாற்றத்தை பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர். இதன் விளைவு, மாணவனுக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
கல்லூரிகளும் அடக்கி வைக்கிறோம் என்ற பெயரில், மாணவர்களை பேசவே விடாமல் செய்கின்றன. மாணவர்களை மாணவர்களாக பார்க்க வேண்டும். மாணவர்களை நம்பியே கல்லூரி; கல்லூரியை நம்பி மாணவர்கள் இல்லை!
நடுக்கம் வேண்டாம்
நான்கு ஆண்டு காலத்தில் அதிக மதிப்பெண் எடுத்து ஒரு நிறுவனத்தில் வேலைவாய்ப்பை பெற வேண்டும் என்றுதான் மாணவர்களும் நினைக்கிறார்களே தவிர, நூலகத்தை சிறந்த முறையில் பயன்படுத்துதல், ஒரே பாடத்தை நான்கு ஆசிரியர்கள் எழுதியதை ஒப்பிடுதல், அதிலிருந்து புரிந்துகொள்ளுதல் போன்றவற்றில் ஆர்வம் காட்டவேண்டும்.
மற்றவர்களுடன் தன் மகனையோ அல்லது மகளையோ ஒப்பிடும் முன்பாக, ஒவ்வொருவருக்குமான ஆர்வம், குணாதியம் வேறுபட்டிருக்கும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். இதற்கு மாணவர்களும், பெற்றோரும் மனம் திறந்து பேச வேண்டும். ஆனால், இன்றைய மாணவர்கள் பேசுவதேயில்லை.
ஆசிரியர் நடத்திக்கொண்டிருக்கும் பாடம் தனக்கு புரியவில்லை என்று தனது நண்பர்களிடம் கூட சொல்ல வெட்கப்படும் மாணவன் ஆசிரியரிடம் எப்படி தைரியமாக சொல்வான்? வகுப்பில் எதுவுமே பேசமால் அமைதியாக இருப்பதை விட, ‘பாடங்களை கவனித்தேன் ஆனால் எனக்கு இந்த பாடம் புரியவில்லை; வேறுவிதமாக நடத்துங்கள்என்ற சொல்வது ஆசிரியருக்கு நிச்சயம் சந்தோஷத்தைத் தான் தரும்.
புரியவில்லை என்று சொல்வது எனக்கு மட்டுமே புரியவில்லை என்றாகிவிடுமோ என்று பயப்படவேண்டாம். எனக்கு இது பிடித்திருக்கிறது என்று சொல்லும் மாணவனைவிட, இது எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லும் மாணவன் தான் பொறியியல் துறையில் சாதிக்க முடியும்!

நன்றி: கல்விமலர்

Monday, September 1, 2014

இன்ஜினீயரிங் கவுன்சிலிங்

ன்ஜினீயரிங் கவுன்சிலிங்! லட்சக் கணக்கான மாணவர்களின் எதிர்காலக் கனவை நனவாக்கும் முதல் புள்ளி. தரமான கல்வி கற்பித்து, சிறந்த வேலைவாய்ப்பி னையும் ஏற்படுத்திக் கொடுக்கும் பொறியியல் கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கட்டணங்களில் சேர இன்ஜினீயரிங் கவுன்சிலிங்தான் ஒரே வாசல். நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால், ப்ளஸ் டூ மதிப்பெண்கள் மட்டுமேதான் கவுன்சிலிங்கில் பரிசீலிக் கப்படும். ஜூன் 25 தொடங்கி, சென்னையில் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் நடக்கும் கவுன்சிலிங். ஏற்கெனவே விண்ணப்பித்திருப்பவர்கள்தான் கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள முடியும். கவுன்சிலிங்கில் கலந்துகொள்ளும் முன் மாணவர்களும் அவர்தம் பெற்றோர்களும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவஹர்.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 454 பொறியியல் கல்லூரிகளின் 1,82,000 இடங்கள் அரசால் நிரப்பப்படும். மீதம் உள்ள 74,000 இடங்களை மேனேஜ்மென்ட் கோட்டா அடிப்படையில் கல்லூரி நிர்வாகத்தினர் நிரப்பிக்கொள்வார்கள். அரசால் நிரப்பப் படும் அந்த 1,82,000 இடங்களுக்குத்தான் இந்த கவுன்சிலிங் நடக்கவிருக்கிறது! கட் ஆஃப் மதிப்பெண்கள்!
ப்ளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில் தான் ஒருவரது ரேங்க் நிர்ணயிக்கப்படுகிறது என்பதால், அதிக மதிப்பெண் பெற்றவர் களுக்கு கவுன்சிலிங்கின் முதல் நாளில் இருந்து அழைப்பு இருக்கும். ப்ளஸ் டூ தேர்வில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களைத் தலா 200 மதிப் பெண்களுக்கு எழுதி இருப்பீர்கள். இதில் ஒரு மாணவர் கணிதத்தில் 200-க்கு எடுத்த மதிப்பெண்களை 100-க்குக் கணக்கிடுவார்கள். அதேபோல இயற்பியலில் 200-க்கு எடுத்த மதிப்பெண்களை 50-க்குக் கணக்கிடுவார்கள். வேதியியலுக்கும் இதே நிலை. ஆக, கணிதம் 100, இயற்பியல் மற்றும் வேதியியல் தலா 50 என மொத்தம் 200-க்குக் கணக்கிடப்படும் மதிப்பெண்கள்தான் அவரது கட் ஆஃப் மதிப்பெண்கள்!
'ரேண்டம் நம்பர்' என்றால் என்ன?
சரிசமமான கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றவர் களுக்கு ரேங்க் நிர்ணயிப்பதில் குழப்பத்தை ஏற்படுத்தும். இதற்குத் தீர்வு காணத்தான் கவுன்சிலிங் விண்ணப்பத்தில் 'ரேண்டம் நம்பர்' (random number) என்ற ஒன்றைக் குறிப்பிட்டு இருப்பார்கள். கிட்டத் தட்ட ஒரு டோக்கன் போலத்தான் இந்த ரேண்டம் எண். இரண்டு மாணவர்கள் கட் ஆஃப் மதிப்பெண்களில் 200-க்கு 190 எடுத்திருக்கும் போது, அவர்கள் இருவருக்கும் ஒரே ரேங்க் தர முடியாது. அப்போது அவர்களில் யார் கணிதத்தில் அதிக மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார்களோ, அவருக்கு அதிகப்பட்ச ரேங்க் வழங்குவார்கள். இருவரும் கணிதத்தில் நூற்றுக்கு நூறோ அல்லது அதிலும் ஒரே மதிப்பெண்கள் எடுத்திருந்தால், இயற்பியலில் யார் அதிக மதிப்பெண் பெற்றிருக்கிறாரோ அவருக்கு முன்னுரிமை அளிப்பார்கள். அதிலும் ஒரே மதிப்பெண் சிக்கல் இருந்தால், வேதியியல் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
இந்த மூன்று பாடங்களிலும் ஒரே மாதிரியான மதிப்பெண்கள் பெற்றிருந்தால், அடுத்து அவர்களின் பிறந்த தேதியைக் கணக்கில்கொள்வார்கள். அதில் யார் மூத்தவரோ, அவருக்கு முன்னுரிமை. இருவரும் ஒரே தேதி, ஒரே வருடத்தில் பிறந்திருந்தால், அப்போதுதான் இந்த ரேண்டம் நம்பருக்கு வேலை வரும். இருவருக்கும் வழங்கப்பட்ட ரேண்டம் நம்பரில் எவருடையது குறைந்த மதிப்பு உள்ளதோ, அவருக்கு ரேங்கில் முன்னுரிமை தரப்படும். தவிர்க்கவே முடியாத சூழலில்தான் இந்த ரேண்டம் நம்பர் பயன்பாட்டுக்கு வரும். இதனால், நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது!
கவனத்தில்கொள்ள வேண்டிய சில விஷயங்கள்...
கவுன்சிலிங்கில் ஒரு முறை கல்லூரியையும், பாடப் பிரிவையும் தேர்வு செய்துவிட்டால், அதுவே இறுதியானது. மாற்ற இயலாது.
தவிர்க்க இயலாத காரணங்களால் கவுன்சிலிங்குக்கு வர முடியாத மாணவர்களுக்குப் பதிலாக, அவர்களின் பெற்றோர் கலந்துகொள்ளலாம். அந்தச் சமயத்தில் பெற்றோர் எடுக்கும் முடிவே இறுதியானது.
கவுன்சிலிங்கில் நீங்கள் ஏதேனும் ஒரு கல்லூரியைத் தேர்வு செய்துவிட்டால், உடனடியாக 5,000 ரூபாய் டெபாசிட்டாகக் கட்ட வேண்டிஇருக்கும். எஸ்.சி., எஸ்.டி பிரிவு மாணவர்களுக்கு இது 1,000 ரூபாய் மட்டுமே!
கவுன்சிலிங்கின்போது தேர்வு செய்த கல்லூரியில் சேராத மாணவர் முதலில் செலுத்திய டெபாசிட் பணத்தைத் திருப்பிக் கேட்கலாம். அப்போது கவுன்சிலிங் சமயத்தில் டெபாசிட் தொகை செலுத்தியதற்கான ரசீதை 31.10.2010-க்குள் ஒப்படைத்தால் 80 சதவிகிதத் தொகை திருப்பி அளிக்கப்படும்!
மறுகூட்டலுக்குப் பிறகு புதிய மதிப்பெண்கள், புதிய ரேங்க் பெற்றிருந்தால், பழைய மதிப்பெண்ணுக்குக் கொடுத்த தேதி மாறி இருந்தாலும் கவுன்சிலிங்கில் கலந்துகொள்ளலாம்!
கல்லூரிகளைத் தேர்வு செய்யும்போது மாணவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
முறையான அங்கீகாரம்!
காற்றோட்டமான வகுப்பறைகள், நல்ல முறையில் இயங்கும் பரிசோதனைக் கூடங்கள், நூலகங்கள், விடுதி வசதிகள், விளையாட்டு மைதானங்கள் போன்ற அடிப்படைக் கட்டுமானங்கள் நல்ல முறையில் இருக்கின்றனவா எனக் கவனித்தல்.
பேராசிரியர்களின் படிப்பு, அனுபவம் ஆகியவை.
கல்லூரி அமைந்திருக்கும் இடத்தில் போக்குவரத்து வசதிகள், மருத்துவமனைகள் போன்றவை.
படிப்பு முடிந்ததும் சிறந்த ப்ளேஸ்மென்ட் வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றனவா என ஆராய்தல்.
பிடித்த பாடத்தை, பிடித்த கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். பல சமயங்களில் பிடித்த பாடம் கிடைக்கும். ஆனால், விரும்பிய கல்லூரியாக இருக்காது. இல்லையென்றால், விரும்பிய கல்லூரி கிடைக்கும். ஆனால், பிடித்த பாடத்தில் இடம் கிடைக்காது. இதுபோன்ற சமயத்தில், எது நமக்குக் கிடைக்கிறதோ அதை நாம் விரும்பிப் படிக்க வேண்டும்.
நான்கு ஆண்டுகள் கடினமாக உழைத்துப் படித்தால், 40 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழலாம். ஆகவே, என்ன பாடம், எந்தக் கல்லூரியில் கிடைத்தாலும், அதை விரும்பிப் படியுங்கள். மாணவர்கள் கவனிக்க வேண்டிய ஒரே விஷயம், சிறந்த முறையில் அடிப்படை வசதிகள்கொண்ட கல்லூரியாக இருக்கிறதா என்பதுதான்!
சில கேள்விகள்... சில விளக்கங்கள்!
"கவுன்சிலிங் மூலம் கல்லூரியில் சேர்ந்த பிறகு, அங்கு போதிய வசதிகள், தரமான கல்வி அனுபவங்கள் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது?"
"முதல் வருடம் அந்தக் கல்லூரியில் படித்துவிட்டு மாற்றுச் சான்றிதழ் பெற்றுக்கொண்டு இரண்டாவது வருடப் படிப்பை வேறு ஒரு கல்லூரியில் தொடரலாம்!"
"ப்ளஸ் டூ தேர்வில் ஃபெயில் ஆகி உடனடிச் சிறப்புத் தேர்வு எழுதியவர்கள், தக்க மதிப்பெண்கள் இருந்தால் கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள முடியுமா?"
"முடியும். அவர்களுக்கென்று தனியாக 'சப்ளிமென்ட்டரி கவுன்சிலிங்' நடக்கும். அதைப்பற்றிய விவரங்கள் நாளிதழ்களில் வெளியாகும்!"
"வெளியூர்களில் இருந்து கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள பெற்றோருடன் வரும் மாணவர்களுக்கு அரசு ஏதேனும் பயணப் படிகள் தருகின்றனவா?"
"வெளியூர்களில் இருந்து கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள சென்னை வரும் மாணவர் மற்றும் அவருக்குத் துணையாக வரும் ஒருவருக்கு பேருந்து அல்லது ரயில் கட்டணத்தில் 50 சதவிகிதச் சலுகை அளிக்கப்படும். இச்சலுகையைப் பெற கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள அழைக்கும் கடிதத்தைப் பேருந்து நடத்துனரிடமோ அல்லது ரயில் டிக்கெட் முன் பதிவின்போதோ காண்பிக்க வேண்டும்!"
"தவிர்க்க முடியாத காரணங்களால் குறிப்பிட்ட தேதியில் கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள முடியாதவர்கள் அடுத்து வரும் நாட்களில் கலந்துகொள்ள முடியுமா?"
"கலந்துகொள்ளலாம். ஆனால், அவர்களுக்கு வழங்கப்பட்ட ரேங்க் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட நாளைத் தவறவிட்டதால், அடுத்து வரும் நாளில் எந்தக் கல்லூரியில், என்ன படிப்பு இருக்கிறதோ, அதில் ஏதாவது ஒன்றைத்தான் தேர்வு செய்ய முடியும்!"

டாப்- 5 பொறியியல் படிப்புகள்!
வேலைவாய்ப்பு, சம்பளம், எதிர்கால வளர்ச்சி எனப் பல கோணங்களில் மாணவர்களிடையே 'மோஸ்ட் வான்டட்' பொறியியல் படிப்புகள் அந்தஸ்துடன் இருக்கும் டாப்-5 கோர்ஸ்கள் இவை!
மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்
இயந்திரங்களோடு பணியாற்றக் கற்றுத்தரும் படிப்பு. பெரிய தொழிற்சாலைகள், இயந்திர ஆலைகள், இரும்பு ஆலைகள் போன்ற உற்பத்தி மற்றும் நாட்டின் அடிப்படைக் கட்டுமானத்துடன் தொடர்புடைய பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு நிச்சயம். எந்த ஒரு பொருள் கையில் கிடைத்தாலும், அதைப் பிரித்து அக்குவேறு, ஆணிவேறாக ஆராய் வதில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால், நீங்கள் 'டிக்' அடிக்க வேண்டியது இந்தப் படிப்பைத்தான்.
எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங்
உங்களுக்கு மின்சாரம், மின்னணு போன்ற பொருட்களை ஆராய்ந்து அதன் மூலம் புதிதாக ஒரு எலெக்ட்ரானிக் சாதனத்தை உருவாக்கும் ஆர்வம் இருந்தால், இந்தப் படிப்பு உங்களுக்கு ஏற்றது. மின் சாதனங்களைத் தயாரிக்கும் நிறுவனம், ராணுவம் போன்றவற்றில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. எவர்கிரீன் படிப்பாக இதற்கு மாணவர்களிடத்தில் எப்போதும் சிவப்புக் கம்பள வரவேற்பு!
எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங்
மின் இயந்திரங்களைக்கொண்டு தொடர்புகொள்ளும் அறிவியலைக் கற்றுத் தருகிற பாடம். தகவல் தொடர்பு உள்ளிட்ட வேலைவாய்ப்புகளை அள்ளி வழங்கும் படிப்பு இது!
கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினீயரிங்
உலகத்தைச் சுருக்கிவிட்ட கணினியைப்பற்றி எந்த அறிமுகமும் தேவை இல்லை. எந்தத் துறையிலும் கணினி பயன்பாடு என்பது தவிர்க்க முடியாத இன்றைய சூழலில் வேலைவாய்ப்புகள் ஹார்டுவேர், சாஃப்ட்வேர், புரொகிராமர் என நீள்கிறது பட்டியல்!
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி
தகவல் தொடர்பும், மென்பொருள் ஏற்றுமதியும் ஏகமாக அதிகரித்து வரும் இந்நாளில், இந்தப் படிப்புக்கு நிச்சய வேலைவாய்ப்பு உண்டு. பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்கள் இந்தியாவில் கோலோச்சி வருவதால், கையும் பையும் நிறையச் சம்பளம் என்ப தால், இதற்குத் தனி மவுசு!
இந்தப் பட்டியலில் தொடர்ந்து சிவில் இன்ஜினீயரிங், புரொடக்ஷன் இன்ஜினீயரிங், இன்ஸ்ட்ரூமென்ட் இன்ஜினீயரிங், என்விரான்மென்டல் இன்ஜினீயரிங், கெமிக்கல் இன்ஜினீயரிங் ஆகியவை இடம் பிடிக்கின்றன


Wednesday, April 30, 2014

வேளாண் பல்கலை: 2014 - 15 கல்வி ஆண்டு இளங்கலை படிப்புக்கு சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் மே 12-ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வரும் கல்வியாண்டில் (2014-15) இளங்கலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு மே 2-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதிக்குள் வெளியிடப்படும். இளங்கலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் மே 12-ஆம் தேதிமுதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
உறுப்புக் கல்லூரிகளில் 1,040 இடங்களும், இணைப்புக் கல்லூரிகளில் 780 இடங்களும் என மொத்தம் 1,820 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்களை கொண்டு தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதனடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மாணவர் சேர்க்கை ஒற்றைச் சாளர முறையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும். இக்கல்வியாண்டில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதன்படி
வேளாண்மைப் பல்கலைக்கழக இணையதளத்திற்குச் சென்று (www.tnau.ac.in/admission.html) விண்ணப்பத்தை அத்தளத்திலேயே பூர்த்தி செய்து, பதிவு செய்ய வேண்டும்.
சிறப்பு இட ஒதுக்கீடுகளுக்கான முன்னாள் ராணுவத்தினர் வாரிசுதாரர், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுதாரர், விளையாட்டு வீரர்கள் பிரிவில் விண்ணப்பிப்போர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து முதன்மையர் (வேளாண்மை) மற்றும் தலைவர் (மாணவர் சேர்க்கை), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை - 641003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவு செய்தபின், விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ.600, எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.300-ஐ கிரடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் செலுத்தலாம்.
இந்த வசதி இல்லாதவர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட வங்கி ரசீது (செலான்) மூலம் எந்தவொரு ஸ்டேட் வங்கி கிளையிலும் கட்டணத்தைச் செலுத்தலாம்.
உத்தேச மாணவர் சேர்க்கை விவரம்
1. இளங்கலை படிப்புகளுக்கான சேர்க்கை விவரம் பத்திரிகைகளில் வெளியீடு- மே 2 முதல் மே 12-ஆம் தேதிக்குள்.
2. இணையதள விண்ணப்பம் துவங்கும் நாள் - மே 12.
3. இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களைப் பெற கடைசி நாள் - ஜூன் 7.
4. தரவரிசை பட்டியல் வெளியீடு - ஜூன் 16.
5. முதல்கட்ட கலந்தாய்வு (பொதுப் பிரிவு), சிறப்பு ஒதுக்கீடு, தொழில் கல்விக்கான கலந்தாய்வு - ஜூன் 30 முதல் ஜூலை 9-ஆம் தேதி வரை.
6. இரண்டாம் கட்ட கலந்தாய்வு - ஜூலை 14 முதல் 17-ஆம் தேதி வரை.
7. கல்லூரி வகுப்புகள் துவக்கம் - ஜூலை 25.
மேலும் விவரங்களுக்கு 0422-6611345, 6611346. இணையதள முகவரி: www.tnau.ac.in/admission.html

Sunday, April 13, 2014

ஜிமேட் தேர்வில் வெற்றி பெற வழிமுறைகள்

தி கிராஜுவேட் மேனேஜ்மென்ட் அட்மிசன் கவுன்சில் (ஜி.எம்.ஏ.சி) என்ற அமைப்பால், ஜிமேட் தேர்வு நிர்வகித்து நடத்தப்படுகிறது. இந்த கவுன்சில், உலகளாவிய அளவில், வணிகப் பள்ளிகளின் ஒரு லாப நோக்கமற்ற அமைப்பு ஆகும்.

இத்தேர்வின் மதிப்பெண்கள், சுமார் 110 நாடுகளில் அங்கீகரிக்கப்படுகின்றன. ஜிமேட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சுமார் 1500க்கும் மேற்பட்ட பல்கலைகளில் 5400க்கும் மேற்பட்ட படிப்புகளில் சேர்க்கை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. ஜிமேட் தேர்வானது, நம்பத் தகுந்த ஒன்றாக கல்வி நிறுவனங்களால் பார்க்கப்படுகிறது. மேலும், ஜிமேட் மதிப்பெண்கள் தொடர்பாக, 'ஜிஎம்ஏசி' அமைப்பு 'வேலிடிட்டி ஸ்டடிஸ்' நடத்துகிறது.

உலகம் முழுவதுமுள்ள பல்வேறான மையங்களில் ஜிமேட் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஒரு ஆண்டுக்கு அதிகபட்சம் 5 முறைகள் இந்த தேர்வை ஒருவர் எழுதலாம். மேலும், ஒரு தேர்வு முடிந்து அடுத்த தேர்வை எழுதும் காலத்திற்கு குறைந்த பட்சம் 31 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும். இத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் 5 ஆண்டு வரை செல்லத்தக்கவை.

தேர்வு:

ஜிமேட் தேர்வில் 4 பிரிவுகள் உள்ளன. Analytical Writing Assessment, Integrated reasoning, quantitative and verbal ஆகும். இத்தேர்வில், கடந்த 2012ம் ஆண்டு Integrated reasoning என்ற புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய முறைகள் மற்றும் பலவித மூலங்களில் இருந்து கொடுக்கப்படும் தரவுகளை மதிப்பிடும் ஆற்றல் ஒரு மாணவருக்கு இருக்கிறதா என்பதை சோதித்து அறியும் வகையில் இந்த அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.

குவாண்டிடேடிவ்:

தேர்வு எழுதுவோர் Arithmetic elementary algebra and concepts of geometry ஆகிய துறைகளில் பெற்றுள்ள அறிவை சோதிப்பது இப்பகுதியின் நோக்கம். மேலும், இரண்டு வகையான குவாண்டிடேடிவ் கேள்விகள் இப்பகுதியில் உள்ளன. problem solving மற்றும் data sufficiency போன்றவை அந்த 2 பிரிவுகள். 

problem solving கேள்விகள், ஒருவரின் மதிப்பாய்வு மற்றும் சிக்கல் தீர்க்கும் திறனை சோதிக்கின்றன. அதேசமயம், data sufficiency கேள்விகள் ஒரு குவாண்டிடேடிவ் சிக்கலை எவ்வாறு ஒருவர் பகுப்பாய்வு செய்கிறார் என்பதை மதிப்பிடுகிறது. மேலும், தொடர்புடைய டேட்டாவை அடையாளம் காண்பதில் உங்களின் திறன் மற்றும் சிக்கலை சரிசெய்யும் அளவிற்கு உங்களிடம் போதுமான தரவு இருக்கிறதா என்பதையும் இத்தகைய கேள்விகள் சோதிக்கின்றன.

வெர்பல்:

எழுதப்பட்ட விஷயத்தை படித்தல் மற்றும் புரிந்து கொள்ளுதல், விவாதங்களை மதிப்பிடல் மற்றும் எழுதப்பட்டவற்றை சரிபார்த்தல் போன்ற திறன்கள் இப்பகுதியில் சோதிக்கப்படுகின்றன. இப்பகுதியின் கேள்விகள் reading, comprehension, critical reasoning, sentence correction ஆகியவற்றில் இருந்து இடம் பெறும்.

இன்டக்ரேட்டட் ரீசனிங்:

பலவிதமான மூலங்களில் இருந்து வரும் தரவுகளை வைத்து பணிபுரியும் ஆற்றல் ஒருவருக்கு இருக்கிறதா என்பதை சோதிக்கவே, இந்த பகுதி கடந்த 2012ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இப்பிரிவில் வெவ்வேறு வடிவங்களில் மொத்தம் 12 கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். graphic interpretation, two part analysis, table analysis and multi source reasoning போன்றவை அவற்றுள் சில.

Analytical writing மதிப்பீடு:

ஒரு விவாதத்தை பகுப்பாய்வு செய்யும் இப்பகுதியானது, 30 நிமிடங்கள் நீடிக்கும். இப்பிரிவில் ஒருவர், கொடுக்கப்பட்ட ஒரு விஷயத்தில் பொதிந்திருக்கும் அம்சத்தை பகுப்பாய்வு செய்வதோடு அதைப்பற்றி எழுதவும் வேண்டும். 

quantitative மற்றும் verbal பிரிவுகள், computer adaptive முறையிலானவை. இப்பிரிவுகளில், நீங்கள் பதிலளித்த கேள்விகளின் எண்ணிக்கை, அதன் கடினத்தன்மை மற்றும் நீங்கள் பதிலளித்த கேள்விகள், இதர தன்மைகள் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும். நீங்கள் அதிக கேள்விகளுக்கு பதிலளித்தால், அதிக மதிப்பெண்களை பெறுவீர்கள்.

மேற்கூறிய இரு பிரிவுகளை தவிர்த்து integrated reasoning (IR) மற்றும் Analytical Writing Assessment (AWA) ஆகிய பிரிவுகளுக்கு தனித்து மதிப்பெண்கள் வழங்கப்படும். IR மற்றும் AWA ஆகிய பிரிவுகளின் மீதான உங்களின் செயல்பாடுகள் ஒட்டுமொத்த ஜிமேட் மதிப்பெண்களோடு இணைக்கப்படாது.

இந்திய கல்வி நிறுவனங்களும், ஜிமேட் தேர்வும்:

சுமார் 150க்கும் மேற்பட்ட படிப்புகளை வழங்கும் இந்தியாவின் 80க்கும் மேற்பட்ட மேலாண்மை கல்வி நிறுவனங்கள், ஜிமேட் மதிப்பெண்களை ஏற்றுக்கொள்கின்றன. பிரத்யேகமாக 5 மேலாண்மை கல்வி நிறுவனங்களில், 5 படிப்புகளுக்கு ஜிமேட் ஜிமேட் மூலமாக மட்டுமே மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். 

அவை, pgp; isp, hyderabad, pgpex; iim, calcutta, pgpx' iim, ahmedabad, ipmx; iim, lucknow, epgp; iim, bangalore இவை தவிர வேறு சில முக்கிய இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்களும், ஜிமேட் மதிப்பெண்களின் மூலமாக மாணவர் சேர்க்கை நடத்துகின்றன. 

அவை, iims of indore, kozhikondu, shilong, udaipur, ranchi, trichy, raipur, xlri.jamshedpur, spjimr, mumbai, imt of ghaziabad, hyderabad, nagpur. 

தேர்வுக்கு தயாராதல் :

ஜிமேட் தேர்வுக்கு, அவசர கதியில் தயாராதல் தவறு. ஒருவேளை, உங்களின் நண்பர்களில் சிலர் இந்த தவறை செய்தாலும், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் எந்த மேலாண்மை கல்வி நிறுவனத்தில் சேர உள்ளீர்கள் என்பதை முடிவு செய்து கொண்டு, அந்த கல்வி நிறுவனம் ஜிமேட் தேர்வின் எந்தப் பிரிவு மதிப்பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை அறிந்து வைத்து, அதற்கேற்ப நமது தயாராதலை மேற்கொள்ள வேண்டும்.
மொத்த மதிப்பெண்கள் அல்லது perfect மதிப்பெண்கள் என்பதைப் பற்றி எந்த தீர்மானமும் வைத்துக் கொள்ள தேவையில்லை. ஏனெனில், வணிகப் பள்ளிகள், பொதுவாக அவற்றுக்கு முக்கியத்தவம் தருவதில்லை. எனவே, ஒரு சிறப்பான target ஐ நிர்ணயம் செய்து அதற்கேற்ப இயங்கவும்.

மாதிரி தேர்வுகளை எழுதி, அதன் மூலம் நமது பலம் மற்றும் பலவீனங்களை அறியவும். ஜிமேட் தயாராலுக்கான ஒரு விரிவான திட்டத்தை தயார் செய்து, அதற்கேற்ப தவறாமல் செயல்படவும். அதேசமயம், மிகவும் ஒரு கடினமான மனோநிலையில் இருத்தல் நல்லதல்ல. ஏனெனில், நாம் படிப்பதை நாமே அனுபவித்து படித்தால் தான் நீண்ட கால பயனை நாம் அனுபவிக்க முடியும்.

ஜிமேட் தேர்வு முறை:

analytical writing assessment 30 1 analysis of an argiment 0 to 6, integrated reasoning 30 12 multi source reasoning, table analysis, graphic interpretation, two part analysis 1 to 8 (விரும்பினால் 8 நிமிட இடைவெளி எடுத்துக் கொள்ளலாம்)

quantitative 75 37 data sufficiency, problem solving 0 to 60 60 (விரும்பினால் 8 நிமிட இடைவெளி எடுத்துக் கொள்ளலாம்)

verbal 75 41 reading comprehension, critical reasoning, sentence correction 0 to 60 . ஒட்டு மொத்த கால அளவு & 3.30 மணி நேரங்கள்.